காயம் காரணமாக கேப்டன் டோணி 10 நாள் ஓய்வில் இருப்பார் என்று வெளியான செய்தி தவறு. அவரால் விரைவிலேயே விளையாட முடியும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் கூறியுள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டோணிக்கு காயம் ஏற்பட்டது. அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் பத்து நாள் ஓய்வெடுக்க வேண்டும் என அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து பத்து நாட்கள் டோணி விளையாட மாட்டார், அவருக்குப் பதில் சுரேஷ் ரெய்னா கேப்டனாக செயல்படுவார் என செய்திகள் வெளியாகின.

இதை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் மறுத்துள்ளது. இதுகுறித்து அணி அதிகாரி ருஸ்ஸல் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ஞாயிற்றுக்கிழமை டோணி நல்ல நிலைக்குத் திரும்பினால், அவரால் செவ்வாய்க்கிழமையன்று பெங்களூர் அணிக்கு எதிராக நடைபெறும் போட்டியில் நிச்சயம் விளையாட முடியும்.ட

அவருக்கு 10 நாள் ஓய்வு அளிக்கப்படவில்லை. அவரால் முடிந்தால் நிச்சயம் விளையாடுவார் என்றார்.

முன்னதாக சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளரான குருநாத் மெய்யப்பன் கூறுகையில், டோணியால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டால் சுரேஷ் ரெய்னா கேப்டனாக செயல்படுவார் என்று கூறியிருந்தார். பார்த்தீவ் படேல் விக்கெட் கீப்பராக செயல்படுவார் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் நாளை டெல்லியில், டெல்லி அணியையும், ஞாயிற்றுக்கிழமை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியையும் சந்திக்கவுள்ளது.

டோணி இன்னும் முழு உடல் தகுதியைப் பெறாத காரணத்தால் இந்த இரு போட்டிகளிலும் அவர் விளையாட மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது.

0 comments