ஐஃபா விழா செத்துப் போன விவகாரமாம்!- சொல்கிறார் சூர்யா

விவாதத்துக்குப் போகும் முன் முதலில் செய்தி:

பெங்களூர் மிர்ரர் நாளிதழுக்கு நடிகர் சூர்யா அளித்துள்ள பேட்டி இது:

தடையை மீறி கொழும்பில் நடந்த ஐஃபா விழாவில் பங்கேற்ற விவேக் ஓபராயுடன் இணைந்து நீங்கள் நடித்துள்ள படம் ரத்த சரித்திரா. இந்தப் படம் தென்மாநிலங்களில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதுபற்றி என்ன சொல்கிறீர்கள்?

“ஐஃபா விழா விவகாரம் செத்துப் போன ஒன்று. அதை இனியும் இங்கே பேசிக் கொண்டிருக்கக் கூடாது. அது ஒரு சின்ன விஷயம். அதைப் போய் இன்னும் பெரிதாக்கிக் கொண்டிருக்கிறீர்களே… என்னுடைய ரத்த சரித்திரா வெளியீட்டை அந்த விழா தொடர்பாக விதிக்கப்பட்ட தடைகள் ஒன்றும் செய்துவிடாது. சமீபத்தில் ராவணன் ரிலீஸானபோதுகூட யாரும் ஒன்றும் சொல்லவில்லையே (என்ன சொல்லணும்?).

ரத்த சரித்திரம் படப்பிடிப்பின்போது நான் விவேக் ஓபராயோடு பேசினேன். அப்போது யுனிசெப் மற்றும் அந்நாட்டின் உள்ளூர் தமிழர்களுடன் இணைந்து புதிய பள்ளி ஒன்றை அமைத்திருப்பதாகச் சொன்னார். இந்த விஷயத்தில் அவர் என்ன உதவி கேட்டாலும் செய்ய நான் தயாராக உள்ளேன்.

நடிகர்கள் இலங்கை சென்றது வெறும் கேளிக்கைக்காக அல்ல. அங்குள்ள மக்களுக்கு உதவத்தான். இந்தப் பிரச்சினை அன்றோடு முடிந்துவிட்டது. திரும்பத் திரும்ப அதை கிளறுவது ஏன்?” என்று கேட்டுள்ளார் சூர்யா.

கொழும்பில் நடந்த சர்வதேச இந்திய திரை விழாவை தென்னகத் திரையுலகமே புறக்கணித்தது. வட இந்தியாவின் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஷாரூக்கான், அமீர்கான், ஐஸ்வர்யா ராய், ஜான் ஆபிரகாம், அக்ஷய் குமார் என முன்னணி நட்சத்திரங்கள் தமிழர் வேண்டுகோளை ஏற்று இலங்கை போகாமல் தவிர்த்தனர். இதையும் மீறி சிலர் போனார்கள். அவர்களின் படங்கள் இனி தென்னிந்தியாவின் 5 மாநிலங்களில் திரையிடப்பட மாட்டாது எனறு தென்னிந்திய திரைப்பட கூட்டமைப்பு அறிவித்தது.

விழாவும் படுதோல்வியடைந்தது. ஈழத் தமிழர் படுகொலைக்கு இந்தியத் திரையுலகம் இலங்கை அரசுக்கு தெரிவித்த பெரும் கண்டனம் இது என்றே சர்வதேச அளவில் பார்க்கப்பட்டது. டைம்ஸ் போன்ற பத்திரிகைகளே இதைக் குறிப்பிடிருந்தன.

இன்னொரு பக்கம் தடையை மீறி ஐஃபா விழாவுக்குப் போன விவேக் ஓபராய், சல்மான்கான், ஹ்ரித்திக் ரோஷன் படங்கள் தென்னகத்தில் வெளியாகத் தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், சூர்யா நடித்து அடுத்து வெளியாக உள்ள ரத்த சரித்திரம் தமிழ், இந்திப் படங்களில் சூர்யாவுடன் விவேக் ஓபராய் இன்னொரு நாயகனாக நடித்துள்ளார். இந்தப் படத்தை வெளியிடக் கூடாது என தமிழ் உணர்வாளர்கள் எதிர்ப்புக் குரல் கொடுத்து வருகின்றனர்.

ஐஃபா விழாவை எதிர்த்து மும்பையில் ஆர்ப்பாட்டங்களில் இறங்கி அமிதாப் போன்றவர்களை விழாவுக்குச் செல்லாமல் தடுத்த சீமானின் நாம் தமிழர் கட்சி, ரத்த சரித்திரம் ரிலீஸ் விஷயத்தில் மட்டும் அடக்கி வாசிக்கிறது. “சூர்யா என் தம்பி. அவரது படத்தை மட்டும் மன்னிக்கலாம்” என்று பல்டியடித்துள்ளார் சீமான். ஆனால் உண்மையில் சூர்யாவும் கார்த்தியும் தந்தை சிவகுமாருடன் போய் சீமானை நேரில் பார்த்து சமாதானப்படுத்தியுள்ளனர். அதுவே இந்த பல்டிக்குக் காரணமாம்.

சீமானின் இந்த கொள்கை நழுவலுக்கு உணர்வாளர்கள் மத்தியில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. தமிழுணர்வை தனது கட்டப்பஞ்சாயத்துக்காகப் பயன்படுத்துவதுதான் இவரது நோக்கமா? என கேட்கத் துவங்கியுள்ளனர்.

இந்த நேரத்தில்தான் சூர்யா, மிக அலட்சியாகவும் திமிராகவும் இந்தப் பேட்டியை அளித்துள்ளார்.

ஐஃபா விழா முடிந்தால்… எல்லாம் முடிந்துவிட்டதாக அர்த்தமா? தமிழர் பிரச்சினை தீர்ந்துவிட்டதா? அவரவர் வசதிக்கேற்ற வகையில் போராட்டத்தையும், தடைகளையும் உடைத்துக் கொள்ளலாமா?

இந்த கருமத்தை முன்பே சொல்லியிருந்தால், அமிதாப்பும், அபிஷேக்கும், ஐஸ்வர்யா ராயும், ஷாரூக்கும் தடையை சுலமாக மீறி கொழும்பு போய், சிங்களர்களைக் குளிர்வித்து, இலங்கை அரசிடம் ஏகப்பட்ட சலுகைகளை அனுபவித்திருப்பார்களே (சல்மானும் விவேக் ஓபராயும் இப்போது வடக்குப் புணரமைப்பு திட்டத்தின் பங்குதாரர்கள். பல ஒப்பந்தங்களை இருவரும் பெற்றுள்ளனர்)… உண்மையில், இவர்களுக்கும் தமிழர் பிரச்சினைக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?

தமிழனுக்கு எதிரி எங்கிருந்தோ வரவேண்டும் என்பதில்லை. சினிமாக்காரர்களை நம்பி ஒரு இனப் போராட்டத்தை நடத்த முடியாது என்பதை மீண்டும் நிரூபித்துள்ளனர். இவர்கள் வெறும் வியாபாரிகள். அண்ணன் எப்போ சாவான், திண்ணை எப்போ காலியாகும் என்பதுதான் இவர்கள் சித்தாந்தம்!

பெங்களூர் மிர்ரர் வெளியிட்டுள்ள சூர்யாவின் பேட்டி

0 comments