நான் ஒரு சமூக சேவகன். ஆன்மீக ஆராய்ச்சியாளன். மற்ற துறையினர் தவறு செய்தால் கொடுக்கப்படும் 'பெனிபிட் ஆப் தி டவுட்' கூட எனக்குத் தரப்படவில்லை என்று கூறியுள்ளார் நித்தியானந்தா.

ஜெயா டிவிக்கு நித்தியானந்தா அளித்துள்ள ஒரு வீடியோ பேட்டியில் கூறியிருப்பதாவது...

சில நாட்களுக்கு முனபாக வெளியிடப்பட்ட வீடியோ டேப் பற்றியும், அதைத் தொடர்ந்து நடந்த பல துரதிரஷ்டவசமான நிகழ்வுகளைப் பற்றியும் உங்கள் முன்பாக சில உண்மைளையும் சில கருத்துக்களையும் மனம் திறந்து பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

பல பொதுமக்களிடமிருந்தும், நிருபர்களிடமிருந்து வந்திருக்கும் கேள்விகளுக்கும் விடையளிக்கிறேன்.

முதலில் சொல்ல விரும்பும் சில கருத்துக்கள் வீடியோ டேப் குறித்து இப்போதுதான் ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். மிஸ்ரெப்ரசன்டேஷன், மேனிபுலேஷன், கான்ஸிபிரஸி இவையெல்லாம் பாகமாக இருக்கிறது என்பதை ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்.

ஆராய்வதற்கு முன்பாக எந்தவொரு செய்தியையும், கருத்தையும் நான் சொல்ல விரும்பவில்லை. அடிப்படையாக அதைத் தாண்டிய சில உண்மைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இந்த வீடியோ டேப் வெளியிடப்பட்ட உடனேயே அதனுடைய உண்மைகளைப் பற்றி எந்தவித ஆராய்ச்சியும் செய்யாமல் சமூக சேவை செய்து வரும் எனது தியான பீட ஆசிரமங்கள், பல இடங்களில் சமூக விரோத கும்பலால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை ஆசிரமம் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவளிக்கிற, வாரந்தோறும் மருத்துவ உதவி செய்கிற, பல ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு கல்வி உதவி செய்து வருகிற ஒரு சமூக சேவை நிறுவனம். அங்கிருந்த பிரமச்சாரி ஒருவரை தள்ளி, சமூக விரோத கும்பல் ஒன்று ஆசிரமங்களை அடித்து நொறுக்கி ஒரே ஒரு மணி நேரத்திற்குள் எட்டு இடங்களில் ஆசிரமங்களும், தியான மையங்களும் அடித்து நொறுக்கப்பட்டன.

ஒரு நாளுக்குள் நூற்றுக்கணக்கான இடங்களில் பல நிகழ்வுகளை செய்ததனால் யார் இதைச் செய்தார்கள், ஏன் இதைச் செய்தார்கள், எங்களுக்கு யார் விரோதி என்றே எங்களுக்குத் தெரியவில்லை. ஏனென்றால் எங்களுக்கு விரோதிகள் இருப்பார்கள் என்று நாங்கள் நினைத்துக் கூட பார்த்ததில்லை. நாங்கள் அமைதியாக வாழ்கின்ற ஒரு ஆன்மீக இயக்கம். நான் அடிப்படையில் ஒரு ஆன்மீக ஆராய்ச்சியாளன்.

என்னுடைய வாழ்க்கையில் எனக்கு நடந்த ஜீவன் முக்தி அனுபவத்தை உலகத்தில் எல்லோரோடும் பகிர்ந்து கொள்ள என்னால் ஆன எல்லா ஆராய்ச்சிகளையும் உலகத்தோடு பகிர்ந்து கொண்டிருக்கும் ஒரு சாதாரண ஆன்மீக ஆராய்ச்சியாளன். இதை நான் உலகத்தோடு செய்து கொண்டிருக்கும் பொழுது ஏன் இத்தனை பேர் என் மீது விரோதம் பாராட்ட வேண்டும் என்று எனக்குமே முழுமையாகப் புரியவில்லை. பல இடங்களில் ஆசிரமங்கள் அடித்து நொறுக்கப்பட்டதும், கொளுத்தப்பட்டதும் துரதிர்ஷ்டவசமானது.

திடீரென்று ஒரே ஒரு இரவில், நானும் தியான பீட இயக்கமும் லட்சக்கணக்ககான பக்தர்களும் அனாதைகளைப் போல உணர்ந்தோம். இதற்கு என்ன என்று தெரியவில்லை. காரணமில்லாமல் யார் எங்களைத் தாக்குகிறார்கள் என்று கூட தெரியவில்லை. எதற்காக நாங்கள் தாக்கப்படுகிறோம் என்பதைக் கூட புரிந்து கொள்ள முடியவில்லை.

ஒரு சில விஷயங்களை உங்கள் முன்பாக பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். கல்வித்துறையிலோ, அரசியல் துறையிலோ, சினிமாத் துறையிலோ, கலைத் துறையிலோ, அறிவியல் துறையிலோ யாராவது சமூக பங்களிப்பு செய்திருந்தால், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய எந்த ஒரு மிகப் பெரிய பிரச்சனையயும், மிகப் பெரிய கலவரங்களையும் சமூகம் ஏற்படுத்துவதில்லை. அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை புறக்ணிக்கப்படுகிறது. அப்படியே மிகப் பெரிய பிரச்சனை வந்தாலும் சந்தேகத்தின் சாதகம் அவர்களுக்கு அளிக்கப்படுகிறது.

நானும் ஆன்மீகத் துறை மட்டுமல்லாமல், பல துறைகளிலும் மிகப் பெரிய பங்களிப்பை அளித்துள்ளேன். கல்வித் துறையில் பள்ளிகளை நடத்துவதும், யோகா துறையிலே உடல் நலத்திற்காகவும், தியானத் துறையிலே மன நலம் சார்ந்தும், இதைத் தாண்டி ஆன்மீகம் மற்றும் அறிவியல் சார்ந்த துறைகளிலும் ஆராயாச்சிகளை செய்து பல துறைகளிலே பல பங்களிப்புகளை செய்துள்ளேன். பல நூல்களை அளித்துள்ளேன். ஒரு எழுத்தாளனாக 200 நூல்களை உருவாக்கியுள்ளேன். ஒரு பேச்சாளனாக பல்வேறு விதமான மேடைகளிலே பொதுமக்களோடு லட்சக்கணக்கான பொதுமக்களோடு எனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டு கடந்த ஏழாண்டு பொது வாழ்க்கையிலே ஆயிரக்கணக்கான மணி நேரம் சொற்பொழிவாற்றியுள்ளேன்.

இப்படி பல துறைகளிலும் பல்வேறுவிதமான பங்களிப்புகளை அளித்துள்ளேன். மருத்துவம், ஆன்மீகம், உடல் நலம், யோகா போன்றவை குறித்து மருத்துவ துறையிலே ஆராய்ச்சி செய்துள்ளேன. வலியில்லா பிரசவம் செய்வது குறித்து யோகா மற்றும் தியானத்தை வடிவமைத்துள்ளேன். பாலியல் தொடர்பான கேள்விகளுக்கு, பிரச்சினைகளுக்கு ஆன்மீக, மன, உணர்வுரீதியான தீர்வுகளை ஆராய்ந்து பல இடங்களில் பேசியுள்ளேன், எழுதியுள்ளேன். இதையெல்லாம் தாண்டி, மனிதனுடைய அடிப்படை உணர்வுகளான கோபம், பொறாமை, காமம், பயம் போன்றவற்றுக்கு ஆன்மீக, மருத்துவ, அறிவியல்ரீதியாக உலகத்திற்கு பல பங்களிப்புகளை செய்துள்ளேன்.

நான் ஒரு சமூக சேவகன். பலவேறு வழிகளில் சமூக சேவை செய்துள்ளேன். இதுபோல பல துறைகளிலே பங்களிப்பை செய்திருந்தாலும், ஆன்மீகத் துறையிலும் பங்களிப்பைச் செய்துள்ளேன் என்ற ஒரே காரணத்திற்காக ஒரு வினாடி கூட எந்த ஒரு விசாரணையும் இல்லாமல், தீர விசாரிக்காமல், பெனிபிட் ஆப் தி டவுட் கூட கொடுக்காமல், இன்னசன்ட் டில் புரூவன் கில்டி சொல்வார்கள், எனது விஷயத்தில் கில்டி டில் புரூவன் இன்னசன்ட் என்ற வகையில் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. ஏன் என்று எனக்கும் புரியவில்லை.

யாரையும் நான் குறை சொல்ல விரும்பவில்லை. யாரையும் நான் பெயரைச் சொல்ல விரும்பவில்லை. யாரையும் நான் பழிக்க விரும்பவில்லை. ஏனென்றால் ஆழ்ந்து விசாரிக்காமல் நான் பழிக்கப்பட்டிருக்கிறேன். ஆனால், அதே தவறை நான் செய்ய விரும்பவில்லை. விசாரிக்காமல் நான் பழிக்க விரும்பவில்லை.

உண்மையில் எத்துணை ஆழ்ந்து யோசித்தாலும் சட்டவிரோதமான எந்த செயலையும் நான் செய்யவில்லை. சட்டத்திற்கு விரோதமான பல துரோகங்கள் எனக்கு இழைக்கப்பட்டுளளன. பக்தர்களும், சீடர்களும், எப்படியாவது, ஏதாவது சட்ட விரோத செயலை செய்ய வேண்டும் என்று ஆசிரமம், தியான பீடங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. அவர்களது வீடுகளையும் கூட அடித்து நொறுக்கியுள்ளனர்.

எனது பிரம்மச்சரிய, சன்னியாசிகள் அடிக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டுள்ளனர். கடும் சொல்லால் துயர்பபடுத்தப்பட்டிருக்கறார்க்ள்.

ஆனால், அவர்கள் எல்லாம் எனது வார்த்தைக்கு கட்டுப்பட்டு பதிலடியில் இறங்காமல் ஆழ்ந்த அமைதியில் உள்ள லட்சோபம் லட்சம் சீடர்களையும், பக்தர்களையும் வணங்குகிறேன்.

சிலர் உண்மையில் புரிந்து கொண்டால் கூட ஆனந்தப்படுவேன். பல பேர் இது போல விசாரிக்கப்படாமல், கொடுமைப்படுத்தப்பட்டு, யோசிக்கப்படாமலேயே சிந்திக்கப்படாமலேயே அவதிக்கு உள்ளாகியிருப்பீர்கள். நீங்கள் எல்லாம் தயவு செய்து உங்களது குரல்களை கொடுங்கள், எனக்காக பிரார்த்தினை செய்யுங்கள். ஒரு சில ஆழமான விஷயங்களை நாம் கவனிக்காமல்யே போயிருக்கிறோம். இதையெல்லாம் தாண்டி இந்த சூழ்நிலையில் கற்றுக் கொண்ட, எனக்குக் கிடைத்த நல்ல செய்தி என்னவென்றால், கேள்விப்பட்ட செய்தி என்னவென்றால், சமூகத்தினுடைய படித்த, உயர்ந்த, மற்றும் யோசிக்கத் தெரிந்த தனியாக தெளிவாக சிந்திக்கத் தெரிந்த பல லட்சக்கணக்கான பேர் எனக்கு தங்களின் ஆதரவையும், அன்பையும் அளித்துள்ளனர்.

சமூகத்தில் ஒரு மிகப் பெரிய பாகம், அடுத்தவருடைய தனிப்பட்ட வாழக்கை சம்பந்தப்பட்ட இழிவான, கொச்சைப்படுத்தபப்ட்ட செய்திகளை பார்க்கவோ, கேட்கவோ விரும்பவில்லை. அதுபோல விஷயத்தை சார்ந்து ஒருவரை எந்தவிதமான பழித்தலுக்கும், எந்தவிதமான முடிவெடுத்தலுக்கும் செய்யவி்ல்லை என்பதை பல லட்சக்கணக்கான செய்திகள், கடிதங்கள் இமெயில்கள், போன்கள் போன்றவை மூலம் தெரிந்து கொண்டதில் உண்மையிலேயே மகிழ்ச்சி அடைகிறேன். இது எனக்கு மிகப் பெரிய ஆறுதலாக உள்ளது.

இன்னும் யாராவது தனிப்பட்ட ஒருவருடைய வாழ்க்கை சார்ந்த ஓரிரு வதந்திகளை பெரிது பண்ணாமல், உண்மையா, பொய்யா என தெரிந்து கொள்ளாமல் கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்று கூறப்படுவதைப் போல, இந்தக் காலத்தில் எதை வேண்டுமானாலும், தவறாக கூற முடியும். எந்த ஒரு செயலையும் எந்த ஒரு கோணத்திலும் சொல்லி விட முடியும். எந்தத் தீர்ப்பையும் சொல்ல முடியும்.

சமூகத்தில் ஒரு மிகப் பெரும் பாகம், இந்த மாதிரியான செய்திகளைப் பற்றிக் கவலைப்படாமல், செய்திகளை வைத்து மனிதர்களை எடை போடாமல் இருப்பது குறித்து மகிழ்கிறேன்.

ஆனால் சில சமூக விரோத கும்பல் எதைப் பற்றியும் யோசிக்காமல் சமூக சேவை நிறுவனமான தியானபீடம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், செயல்களால் நானும், எனது பக்தர்களும் அனாதைகளைப் போல உணர்கிறோம்.

பொதுமக்களை தயவு செய்து கேட்டுக் கொள்கிறேன், தீர விசாரிக்காமல் எந்த முடிவுக்கும், செயலுக்கும் வர வேண்டாம். எல்லா உண்மைகளும் வெளிவந்து சொல்லப்படும் வரை சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்ள வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் நித்தியானந்தா.

மெளன தியானத்தை நீட்டிக்கிறேன்...

இதேபோல அமெரிக்காவைச் சேர்ந்த ப்ரீலான்ஸ் எழுத்தாளரான மல்ஹோத்ராவுக்கு நித்தியானந்தா அளித்துள்ள இன்னொரு பேட்டியில், நான் மக்களுக்கு கடமைப்பட்டவன், இறைவனுக்கும் தர்மத்திற்கும் கடமைப்பட்டவன். யாரெல்லாம் மக்களை காயப்படுத்துகிறார்களோ அதை குணப்படுத்தும் கடமை எனக்கு உண்டு. என் மீதான நம்பிக்கையை மீண்டும் கொண்டு வர நான் பாடுபடுவேன். மதத் தலைவர்களின் ஆதரவும் எனக்கு கிடைத்து வருகிறது.

எனது மனசாட்சியின் அடிப்படையில், நான் மெளன தியானத்தை தொடர்ந்து நீட்டிக்கப் போகிறேன். போகிறேன். இது புதிய எதிர்காலத்தை உருவாக்கும் என்று நம்புகிறேன். அதுதான் மக்களுக்கு சிறப்பான முறையில் சேவையாற்ற உதவும் என கருதுகிறேன். யாரெல்லாம் மக்களை காயப்படுத்தினார்களோ, அவர்களை குணப்படுத்த தியானம் மூலம் நான் முடிவு செய்துள்ளேன்.

அனைத்துப் பக்தர்களையும் நான் கேட்டுக் கொள்வதெல்லாம் தியானத்தை தொடருங்கள். தயவு செய்து எனது போதனைகளை, சக்திகளை புரிந்து கொள்ளுங்கள். அவை அனைத்தும் சக்தி வாய்ந்தவை. எப்படி, சிவசூத்திரா, பகவத் கீதை, பதஞ்சலி யோக சூத்ரா போன்றவை சக்தி வாய்ந்தவையோ, அதேபோலத்தான் எனது போதனைகளும், தியான முறைகளும். அதை விடாமல் தொடருங்கள். புத்தொளி பெறுங்கள். நமது அன்பையும், பரிவையும் உலகம் முழுவதும் பரவ விடுவோம் என்று கூறியுள்ளார் நித்தியானந்தா.

வழக்கு மாற்றப்பட்டதா இல்லையா...?:

இதற்கிடையே, நித்தியானந்தா மீதான வழக்குகள் கர்நாடகத்திற்கு மாற்றப்பட்டதா இல்லையா என்பது குறித்து டிஜிபி லத்திகா சரண் விளக்கம் அளித்துள்ளார்.

மதுரையில் நடைபெறும் போலீஸார் குறை தீர்ப்பு முகாமில் கலந்து கொண்ட அவரிடம் செய்தியாளர்கள், நித்தியானந்தா வழக்கு குறித்த விசாரனை எந்த அளவில் இருக்கிறது? என்று கேட்டபோது, நித்தியானந்தா வழக்கு விசாரணை கர்நாடகா அரசுக்கு மாற்றப்பட்டு விட்டது என்றார் லத்திகா.

ஆனால் வழக்கு விசாரணை மாற்றப்பட்டதற்கான தகவல் கிடைக்கவில்லை என கர்நாடகா கூறியுள்ளதே? என்று செய்தியாளர்கள் மீண்டும் கேட்டபோது, வழக்கு மாற்றம் குறித்து ரிஜிஸ்டர் தபாலில் தகவல் அனுப்பப்பட்டுள்ளது என்றார் லத்திகா சரண்.

0 comments