நித்தியானந்தா - ரஞ்சிதா தொடர்பான வீடியோ காட்சிகளை தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்ப கர்நாடக உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

நித்தியானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் படுக்கை அறையில் சல்லாபம் செய்யும் வீடியோ காட்சிகள் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நித்தியானந்தா தொடர்பான செய்திகளை வெளியிடும் போதெல்லாம் தொலைக்காட்சிச் சேனல்கள் இந்த ஆபாச வீடியோ காட்சிகளை திரும்பத் திரும்ப ஒளிபரப்பி வந்தன.

வீடுகளில் குழந்தைகள், பெண்கள் என குடும்பத்துடன் பார்க்கும் தொலைக்காட்சி செய்திகளில் இதுபோன்ற அருவருப்பான காட்சிகள் ஒளிபரப்பப்படுவது பரவலாக அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கர்நாடக மாநில வழக்கறிஞர்கள் சங்கத் தலைவரும், முன்னாள் பாஜக எம்எல்ஏவுமான கே.என்.சுப்பார ரெட்டி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், 'நித்தியானந்தா நடிகை ரஞ்சிதாவுடன் அந்தரங்கமாக இருப்பது போன்ற காட்சிகள் அடங்கிய வீடியோவை டிவி சானல்கள் ஒளிபரப்பு செய்வது சட்டவிரோதமாகும்.

மேலும், சன்னியாசி தர்மம் மீது நம்பிக்கைக் கொண்டுள்ள அனைவருமே அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்தக் காட்சிகளை தொலைக்காட்சிகள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பி வருகின்றன. இதைப் பார்க்கும் சிறார்களும், இளைஞர்களும் தவறான நம்பிக்கைக்கு இட்டுச் செல்லப்படுவர்.

மேலும் குடும்பத்தோடு டிவி பார்க்கும்போது இந்தக் காட்சிகளை ஒளிபரப்புவதால் குடும்பத்தினர் பார்க்க முடியாமல் தவிக்கும் நிலையும் ஏற்படுகிறது.

எனவே இந்த காட்சிகளை டிவி சேனல்கள் ஒளிபரப்பு செய்ய தடை விதிக்க வேண்டும்' என்று கோரியுள்ளார்.

இந்த மனு, கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகள் வி.கோபால கவுடா, பி.எஸ்.பாட்டீல் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் நித்தியானந்தா, ரஞ்சிதா தொடர்பான ஆபாச வீடியோ காட்சிகளை ஒளிபரப்ப இடைக்கால தடை விதித்தனர்.

இதுதொடர்பாக விளக்கமளிக்க அரசு மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

வழக்கு விசாரணை வரும் 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

0 comments