திரையுலகம் சார்பில் முதல்வர் கருணாநிதிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில், பல்வேறு விழாக்களில் பங்கேற்க வேண்டுமென நடிகர் நடிகையர் மிரட்டப்படுகிறார்கள் என நடிகர் அஜீத் வெளிப்படையாகத் தெரிவித்தார். இதற்கு ரஜினி ஆதரவு தெரிவித்திருந்தார். இதையடுத்து அவர்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன.


இதையடுத்து திரைப்பட சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு இருவர் மீதும் நடவடிக்கை எடுத்துள்ளது. அஜீத் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டு உள்ளது. ரஜினிக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அஜீத் வருத்தம் தெரிவிப்பாரா? என்பது உறுதியாக தெரியவில்லை.



இதற்கிடையில் அஜீத்துக்கு எதிராக கருத்து தெரிவித்த ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார்தங்கம் வீடு தாக்கப்பட்டது. தனது வீடு தாக்கப்பட்டதற்கு அஜீத்தின் தூண்டுதலே காரணம் என்று காவல்துறையிடமும், நடிகர் சங்கத்திடமும் ஜாக்குவார்தங்கம் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் வருகிற 27 ந்தேதி தியாகராய நகரில் உள்ள சங்க அலுவலகத்தில் நடக்கிறது. நடிகர் சங்கத்தலைவர் சரத்குமார் தலைமை வகிக்கிறார். பொதுச்செயலாளர் ராதாரவி, துணைத்தலைவர்கள் விஜயகுமார், மனோரமா, பொருளாளர் வாகை சந்திரசேகர், இணை செயலாளர்கள் அலெக்ஸ், செல்வராஜ், கே.என்.காளை ஆகியோர் பங்கேற்கிறார்கள். கமிட்டி உறுப்பினர்கள் சத்யராஜ், முரளி, எஸ்.வி.சேகர், சூர்யா, மயில்சாமி, சின்னி ஜெயந்த், மும்தாஜ், சத்யபிரியா, நளினி, பாத்திமாபாபு, குயிலி, நம்பிராஜன், பூச்சி முருகன் ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.



கூட்டத்தில் ரஜினி, அஜீத் விவகாரம் குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்படுகிறது.

0 comments